Home

    Om Shakthi Astro Research Centre Madurai       Contact  /webmaster                     Updated  20-09-06

  

      

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

    
 
திருச்சதகம்-01/25


 
(திருப்பெருந்துறையில் அருளியது)

1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே. 5

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும்
தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. 7

சாவ முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே. 8

தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. 9

பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வார்சுழற்கு அன்பு எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. 10

முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து முன்னாள்
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய்
உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே. 11

உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும்
இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின்
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையக்
கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பேவனே. 12

பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான்
சிவனெம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும்
அவனெம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே
புவனெம் பிரான்தெரி யும்பரிசாவ தியம்புகவே. 13

புகவே தகேன்உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே
தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாவமுதே
நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே. 14

2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)

நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன்
வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம்
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16

வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன்
இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப்
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல்
வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17

ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன்
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க்
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்
சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக்
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21

அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன்
தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22

வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய்
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24

3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்)

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய்
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப்
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம்
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே. 25
 

 Next


 

 
 
 
 
 

                                           Home         [C] Copyright 2004-2006 www.Aanmegam.com     contact