மங்கல விளக்கேற்றல்
மங்கல விளக்கேற்றல் என்பது,மங்கலம்,விளக்கு,ஏற்றல்
என்னும் சொற்களாலாய தொடர்மொழி.அவற்றுள் மங்கலம் என்பது
நன்மை,நலம்,காரியசித்தி,பொலிவு,அறம் என பல பொருட்களை
பயக்கும்.ஆகவே மங்கலத்தை தரும் விளக்கை ஏற்றி வணங்குதல்
என்பது அதன் பொருளாகும்.
தமிழர்கள் எல்லா மங்கல கருமங்களையும் விளக்கேற்றி வணங்கி
தொடங்கும் வழக்கம் மிகப் பழைய காலம் தொடங்கி நிலவி
வருகின்றது.மங்கல கருமம் தொடங்கும் இடத்தையும் அதன்
சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.மங்கல
விளக்கேற்றும் இடத்தில் ஒரு பீடம் அமைத்து அதை வெண்துகிலால்
மூடவும்.அழகுபடுத்திய பீடத்தில் தலைவாழையிலை வைத்து
அதன் மேல் பச்சை அரிசி பரப்பி நிறைகுடம் வைக்க வேண்டும்.எடுத்த
கருமம் செவ்வனே நிறைவேற பிள்ளையாரை வாழையிலையின்
தலைமாட்டில் மாவிலையின் மேல் வைக்கவேண்டும்.
மங்கல விளக்கேற்றும் திசைபழம் ,பாக்கு ,வெற்றிலை ,மஞ்சள்,புஸ்பம்
,சந்தனம் ,திருநீறு ,குங்குமம் ஆகிய மங்கலப் பொருட்களை
ஆங்காங்கே அழகுற வைக்கவும்.குத்துவிளக்கை கிழக்குபுறமாக
வைக்கவேண்டும்.நிறைகுடம் குத்துவிளக்கு ஆகியவற்றின்
முடியில் பூ வைக்கலாம்.குத்துவிளக்கிற்கு தேங்காய் நெய்
இடவும்.
சாம்பிராணி ,ஊதுவர்த்தி ஆகியவற்றினால் நறுமணம் வீசவைக்கவும்.அதன்பின்
ஒரு தட்டில் கர்பூரம் கொழுத்தி தேங்காய் உடைத்து மங்கல
விளக்கேற்றவும்.அதன்பின் திரிகரண சுத்தியும் காரியசித்தியும்
அருள்வாயென்று விநாயகரை நினைந்து ஓதி வணங்கி கருமத்தை
தொடங்கவும்.
விளக்கின் சுடர் ஒளி சிவத்தின் வடிவமாகும்.அச்சிவம்
ஞாயிறிலும் திங்களிலும் செந்தீயிலும் கலந்து நின்று
உலகம் இயங்கப்பொருட்டு விளக்கந் தருகிறது. சிவபெருமானை
இவ்மூன்றிலும் கண்ட நம் சான்றோர் இவ்வழிபாட்டை பல்லாயிரம்
ஆண்டுகட்கு முன்னே விதித்தனர்.
|